India

விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து மிரட்டியவருக்கு 20 ஆண்டு சிறை; மங்களூரு நீதிமன்றம் அதிரடி!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்க்கு வெடிகுண்டு வைத்து மிரட்டல் விடுத்த நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு மங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 20 அன்று, ஆதித்யா ராவ் என்பவர் ஆட்டோவில் மங்களூரு சர்வதேச விமான நிலையம் வந்து டிக்கெட் கவுண்டர் அருகே வி.ஐ.பி வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கைப்பையை வைத்து விட்டு வெளியேறினார்.

விமான நிலையத்திற்கு அருகே கைப்பை கேட்பாரற்று கிடந்தது. அப்போது உடனடியாக செயல்பட்ட மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் (CISF) மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IET) தடயங்களைக் கண்டறிந்து அதை வெளியேற்றினர்.

Also Read: கருவறைக்குள் சிலையை பதுக்கி விற்க முயற்சி; சீர்காழி குருக்கள் கைது; 2 சிலைகள் மீட்பு!

இது சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு கைப்பையை வைத்து சென்ற நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் பெங்களூருவில் உள்ள மாநகர போலிஸ் கமிஷனர் அலுவலகம் சென்று தாமாகவே சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பெங்களூர் மாநகர போலிஸாரால் அல்சூரு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி பின் மங்களூரு போலிஸார் சென்று அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் இது சம்பந்தமான வழக்கில் மங்களூரு போலிஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையை மங்களூரு நான்காவது கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி பல்லவி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை நடத்திய நீதிபதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் ஆதித்ய ராவுக்கு 20 வருட சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: நீராவி முருகனை என்கவுன்ட்டர் செய்த SI தலைமையிலான தனிப்படை - யார் இந்த இசக்கி ராஜா?