India

மூன்றுமே பெண் குழந்தை.. ஒருவயது மகளை உயிரோடு புதைத்து கொலை செய்த தந்தை - மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம்!

மகாராஷ்டிரா மாநிலம், வாடிவால்க் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஹூக்ஹி . இவரது மனைவி காவேரி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கும் நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் சுரேஷ் தனது மனைவியை தொடர்ச்சியாக தாக்கி தகராறு செய்துவந்துள்ளார். மேலும் அவரது நடத்தையிலும் சந்தேகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மனைவி காவேரியைத் தாக்கி, பெல்டால் கழுத்தை நெரிக்க முயன்றுள்ளார். பின்னர் கணவரிடமிருந்து தப்பித்து உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதையடுத்து காவேரி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மூன்று பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையைக் காணவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கணவர் சுரேஷிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, மனைவியுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு ஆத்திரத்தில் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் ஒருவயது குழந்தையை உயிரோடு குழி தோண்டி புதைத்தாக கூறியுள்ளார். இதைக்கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இதையடுத்து பெற்ற மகளையே உயிரோடு கொலை செய்த தந்தை சுரேஷை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சொத்துத் தகராறு.. கணவரை கொடூரமாக கொன்று நாடகமாடிய பாஜக பெண் நிர்வாகி கைது : விசாரணையில் பகீர் தகவல்!