India

சொத்துத் தகராறு.. கணவரை கொடூரமாக கொன்று நாடகமாடிய பாஜக பெண் நிர்வாகி கைது : விசாரணையில் பகீர் தகவல்!

கர்நாடக மாநிலம் தரவாடு மாவட்டம் மரேவாடா கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா (வயது 45). இவருடைய மனைவி ஷோபா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஷோபா, தார்வார் தாலுகா பா.ஜ.க மகளிர் அணியில் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், ஈரப்பாவிடம் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி ஷோபா அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.  

ஆனால் இதற்கு ஈரப்பா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கணவர் ஈரப்பாவை தீர்த்துக்கட்ட ஷோபா முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினமும், ஈரப்பாவிடம் சொத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி ஷோபா தகராறு செய்துள்ளார்.

அப்போதும் அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷோபா, வீட்டில் இருந்த உருட்டு கட்டைகளை எடுத்து மகள்களுடன் சேர்ந்து ஈரப்பாவை சரமாரியாக தாக்கினார்.  இதில் பலத்த காயமடைந்த ஈரப்பா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷோபா, போஸில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அவரது உடலை கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்தில் சிக்கியதாக நாடகமாடி உள்ளார். 

இதனால் சந்தேகமடைந்த டாக்டர்கள், இதுகுறித்து தார்வாட் புறநகர் போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போலிஸார் ஷோபா மற்றும் அவரது மகள்களை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அப்போது, கணவர் ஈரப்பாவை மகள்களுடன் சேர்த்து கொலை செய்ததை ஷோபா ஒப்புக்கொண்டார். இதையடுத்து தார்வாட் புறநகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து ஷோபா மற்றும் அவரது 2 மகள்களையும் கைது செய்தனர். அவர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துக்காக கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒரேநாளில் 81 பேருக்கு மரண தண்டனை.. குற்றவாளிகள் செய்தது என்ன? : கொந்தளிக்கும் மனித உரிமை ஆர்வலர்கள்!