India

புத்தக் கண்காட்சியில் பிக்பாக்கெட் அடித்து மாட்டிக் கொண்ட நடிகை.. நிஜ திருடர்களையே மிஞ்சும் சம்பவம்!

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஏராளமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அப்போது, வாசகர்கள் சிலர் தங்களின் மணிபர்ஸ்களை காணவில்லை என புத்தகக் கண்காட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அனைவரிடமும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த சீரியல் நடிகை ரூப்பா தத்தா அங்கிருந்த குப்பையில் எதையோ போட்டுக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலிஸார் குப்பை தொட்டியில் என்ன இருக்கிறது என்று பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட மணிபர்ஸ்கள் இருப்பதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை பிடித்து போலிஸார் விசாரணை செய்தபோது, அவர்தான் பிக்பாக்கெட் அடித்தது தெரியவந்தது.

பின்னர் மணி பர்ஸ்களில் இருந்து ரூ.65 ஆயிரம் பணத்தைக் கைப்பற்றிய போலிஸார் அதை உரிமையாளர்களிடம் சரிபாதியாக ஒப்படைத்தனர். மேலும் நடிகை ரூப்பா கூட்டமான இடங்களில் பிக்பாக்கெட் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் எந்தெந்த இடங்களில் திருடினோம் என்பதைத் தனது டைரில் தேதி வாரியாக குறிப்பிட்டு வைத்திருந்ததைப் பார்த்து போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அவரை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read: ’கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு தற்கொலை என நாடகம்’ : மனைவி கொலை வழக்கில் உண்மையை கக்கிய கணவன்!