India

2 சிறுநீரகம், 2 கண்கள்.. இறந்தும் 4 பேரை வாழவைத்த 11 வயது சிறுமி!

இமாச்சலப் பிரதேசத்திற்குட்பட்ட மண்டியைச் சேர்ந்தவர் நய்னா தாக்கூர். 11 வயது சிறுமியான இவர் மார்ச் 3ம் தேதி சாலை விபத்தில் சிக்கியுள்ளார். இதில் சிறுமிக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சிறுமியை பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமிக்கு 4 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 7ம் தேதி சிறுமி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். இதைப்பார்த்து மருத்துவமனையில் இருந்தவர்களும் கண்ணீர்விட்டனர். பின்னர் மருத்துவர்கள்,"உங்கள் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது.

எனவே உடல் உறுப்புதானம் செய்ய உதவினால், நான்கு பேருக்கு உங்கள் மகள் மறுவாழ்வு அளித்ததுபோல் இருக்கும்" என கூறியுள்ளனர். இதற்கு அவரது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தொடர்ந்து சிறுமியின் இரண்டு சிறுநீரகங்கள் இரண்டு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் மாற்றிப் பொருத்தப்பட்டது. அதேபோல், இவரது கண்விழிகள் இரண்டு பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிறுமி 4 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த பலரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறுமியின் பெற்றோரைப்போல் பலரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: காமெடியன் to பஞ்சாப் முதலமைச்சர் - யார் இந்த பகவந்த் சிங் மன்?