India

காதல் திருமணம் செய்த வாலிபர் நடுரோட்டில் வெட்டி கொலை.. கர்நாடகாவில் நடந்த ஆணவக் கொலை!

கர்நாடகா மாநிலம், கலபுரகி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் பிரீத்தம். இவர் சுஷ்மிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் இருவரது வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஆண்டு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து காதல் தம்பதி பெங்களூருவில் வசித்து வந்தனர். பின்னர் சில நாட்களுக்கு முன்பு கலபுரகிக்கி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரீத்தம் இருசக்கர வாகனத்தில் வென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சுஷ்மிதாவின் மாமா அரவிந்த் அவரிடம் தகராறு செய்துள்ளார்.

பின்னர் அவருடன் வந்த மற்ற சிலர் திடீரென தாங்கள் எடுத்துவந்த கத்தியை வைத்து பிரீத்தமை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ரத்த வெள்ளத்திலிருந்த பிரீத்தம் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது வாலிபர் பிரீத்தமை ஆணவக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவாக உள்ள பெண்ணின் மாமா அரவிந்த் மற்றும் அரவது கூட்டாளிகளை போலிஸார் தேடிவருகின்றனர். காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கல்குவாரியில் வெடிவைத்த போது நேர்ந்த விபரீதம்.. பாறையில் சிக்கி 10 பேர் பரிதாப பலி!