India

’சிகிச்சைக்கு வந்த சிறுவனிடம் சில்மிஷம்’ : மனநல மருத்துவருக்கு கேரள நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை!

பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட மனநல மருத்துவருக்கு திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்ற கடுங்காவல் தண்டனை கொடுத்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனநல மருத்துவர் கிரீஷ் (58). இவர் அதே பகுதியில் உள்ள பல பள்ளி மாணவர்களுக்கு மனநல சிகிச்சை அளித்திருக்கிறார்.

இதுபோக, மனநலம் குறித்த டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார். இப்படி இருக்கையில், கடந்த 2017ம் ஆண்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன் சரிவர படிக்காமல் இருந்திருக்கிறான். இதனால் முறையான மனநல சிகிச்சை அளிக்கும்படி பெற்றோரிடம் ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதன்படி மாணவனை பெற்றோர் மருத்துவர் கிரிஷிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது சிறுவனை தனியாக பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி அச்சிறுவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கிறார் அந்த மருத்துவர்.

மேலும் இது குறித்து பெற்றோரிடமும் வேறு யாரிடமும் கூறக் கூடாது எனச் சொல்லி மிரட்டியிருக்கிறார். இதனையடுத்து சிறுவனின் நடவடிக்கையில் மாற்றங்களை கண்ட பெற்றோர் அவனிடம் விசாரித்ததில் மருத்துவரின் சில்மிஷங்கள் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து திருவனந்தபுர போர்ட் போலிஸிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கிரீஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் அதிவிரைவு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஏற்கெனவே இதுப்போன்று ஒரு மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதும், சிகிச்சைக்கு வந்த திருமணமான பெண்ணை பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்ததும் மருத்துவ கிரீஷ் மீது புகார் இருந்திருக்கிறது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயகிருஷ்ணன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரீஷுக்கு 6 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை விதித்ததோடு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Also Read: 7 ஆண்டுகளாக மெல்ல கொல்லும் விஷம்: மனைவியின் சதியால் கணவன் ஷாக்; கேரளாவில் நடந்த பகீர் சம்பவத்தின் பின்னணி