India
‘ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு’ - இதுதான் சாக்கு என போலிஸ் ஜீப்பை அபேஸ் செய்தவரால் ஆடிப்போன போலிஸார்!
போலிஸார் அசந்த நேரமாக பார்த்து நாகப்பா என்ற லாரி ஓட்டுநர் போலிஸ் ஜீப்பை ஆட்டையப்போட்ட சம்பவம் கர்நாடகாவில் உள்ள அன்னிகேரி காவல்நிலையத்தில் நடந்துள்ளது.
தார்வாட் மாவட்டத்தில்தான் உள்ளது அன்னிகேரி காவல்நிலையம். கடந்த புதனன்று அந்த காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டரான ஜுலாகட்டி வீடு திரும்புவதற்காக வெளியே வந்து பார்த்திருக்கிறார்.
அப்போது போலிஸார் இருவர் தூங்கிய நிலையில் இருந்திருக்கிறார்கள். இதுபோக அங்கிருந்த காவல் நிலையத்தின் ஜீப்பையும் காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜுலாகட்டி போலிஸ் ஜீப்பை மர்ம நபர் திருடிச் சென்றது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து போலிஸ் ஜீப்பை தேடும் பணியில் போலிஸார் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், பையடாகி என்ற நகர் அருகே உள்ள மோட்பென்னூரில் தன்னந்தனியாக போலிஸ் ஜீப் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அருகே சென்று பார்த்த போது ஜீப் உள்ளே ஒருவர் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
உடனடியாக காவல் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததை அடுத்து உடனடியாக விரைந்து வந்து ஜீப்பை மீட்டதோடு, ஜீப்பை கடத்தியவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஜீப்பை எடுத்துச் சென்றது அன்னிகேரி பகுதியைச் சேர்ந்த நாகப்பா ஹடபட் (45) என்றும் அவர் லாரி ஓட்டுநராக பணியாற்றுகிறார் என்றும் தெரிய வந்திருக்கிறது. மேலும், ஜீப்பை ஏன் கடத்தியதாக விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகப்பா கூறியது போலிஸாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
என்னவெனில், லாரி ஓட்டுநராக இருந்து வரும் நாகப்பாவுக்கு பல காலமாகவே போலிஸ் ஜீப்பை ஓட்ட வேண்டும் என ஆசை இருந்திருக்கிறது. குறிப்பாக போலிஸ் ஜீப்பில் நீண்ட நேரம் சவாரி செய்யவேண்டும் என்ற கனவுடன் இருந்திருக்கிறார்.
அன்னிகேரி காவல் நிலையத்தில் இருக்கும் ஜீப்பை பார்க்கும்போதெல்லாம் அதனை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இப்படி இருக்கையில் கடந்த புதன் கிழமையன்று அன்னிகேரி போலிஸ் ஸ்டேஷன் வழியாகச் சென்றபோது ஜீப்பில் சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும், போலிஸாரும் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு இதுதான் சமயம் என ஜீப்பை ஓட்டிச் சென்றிருக்கிறார்.
அதன்படி அன்னிகேரியில் இருந்து சுமார் 112 கிலோ மீட்டர் தொலைவுக்கு போலிஸ் ஜீப்பில் பயணித்திருக்கிறார். அப்போதுதான் அப்பகுதி மக்களின் தகவலால் சிக்கியிருக்கிறார் நாகப்பா.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!