India

’இது ம.பி., மருதமலை சீன்’ : 8 பேரை ஏமாற்றி திருமண வலையில் விழ வைத்த பெண்; கில்லாடி லேடி சிக்கியது எப்படி?

ஆண்களை ஏமாற்றி திருமண வலையில் விழவைத்து பணம் நகைகளை சுருட்டிக் கொண்டு தப்பித்த ஊர்மிளா என்ற பெண்ணை மத்திய பிரதேச போலிஸார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

பெண்ணின் கூட்டாளிகளான அர்ச்சனா பர்மன் என்ற அர்ச்சனா ராஜ்புத் (40), பாக்சந்த் கோரி (22) மற்றும் அமர் சிங் (50) ஆகியோரும் பிடிபட்டிருக்கிறார்கள்.

ரேணு ராஜ்புத் எனும் ஊர்மிளா அஹிர்வார் என்ற பெண் இதற்கு முன்பு 7 பேரை இதே பாணியில் ஏமாற்றி திருமணம் செய்துள்ளாராம்.

வசதியான வீட்டு ஆண்களாக பார்த்து அவர்களை மயக்கி திருமணம் செய்துக் கொண்டு அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி சுருட்டிக் கொண்டுச் செல்வதே இந்த ஊர்மிளாவின் பிரதான வேலையாக இருந்திருக்கிறது என சியோனி மாவட்ட போலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், கோட்டா மற்றும் தோல்பூரில் உள்ள ஆண்களையும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களிலும் ஊர்மிளா அஹிர்வார் தனது கைவரிசையை காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சியோனி மாவட்டத்தைச் சேர்ந்த தஷ்ரத் படேல் என்பவரை கடந்த செவ்வாயன்று ஜபல்பூரில் 8வதாக மணமுடித்துக் கொண்டார் ஊர்மிளா. திருமணத்தின் போது ஊர்மிளாவின் உறவினர் போர்வையில் இருந்த அமர்சிங்கிற்கு தஷ்ரத் நகைகள், உடைகள் மற்றும் பணத்தை தாராளமாக கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து ஜபல்பூரில் இருந்து கிராமத்தை நோக்கி தம்பதிகள் இருவரும் காரில் புறப்பட்ட போது செல்லும் வழியில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஊர்மிளா பாதியிலேயே காரை விட்டு கீழே இறங்கியிருக்கிறார். அந்த சமயத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி பாக்சந்த் கோரியை மோட்டார் சைக்கிளில் வரவழைத்து அவருடன் ஊர்மிளா பணம், நகையுடன் சென்றிருக்கிறார்.

அப்போதுதான் ஒம்டி பகுதி போலிஸார் அவர்களை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.பாகலின் விசாரணையின் போதுதான் ஊர்மிளா மற்றும் கூட்டாளிகளின் சதி அனைத்தும் தெரியவந்திருக்கிறது. இந்த நிகழ்வு சியோனி மாவட்டத்தை கடந்து சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது

Also Read: ’லைக் பண்ணுங்க; ஃபாலோ பண்ணுங்க’ இன்ஸ்டா மயக்கத்தில் ரீல்ஸ் போட்ட வாலிபர் - கொத்தாக தூக்கிய சென்னை போலிஸ்!