India

“கதறி அழும் ஏழைகளின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது மோடி அரசு” : பட்ஜெட் மீது கடும் அதிருப்தி!

கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய், ஏழை மக்களுக்கு சுண்ணாம்பு என ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். நாட்டு மக்கள் தொகையில் மேல்தட்டில் உள்ள 10 சதவிதத்தினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவிதத்தை பெற்று வரும் நிலையில், அடித்தட்டில் உள்ள 50 சதவிதத்தினர் (அதாவது 65 கோடி மக்கள்) 8 சதவிதம் மட்டுமே பெறுவதை அண்மையில் சர்வதேச ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது.

சமூக கொந்தளிப்பை உருவாக்கும் இந்த ஏற்றத் தாழ்வை சமப்படுத்துவதற்கான முயற்சியில் நிதிநிலை அறிக்கை ஈடுபடவில்லை. 142 பில்லியனர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறை காட்டுகிறது. அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்துவிட்டது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பாஜக அரசு செய்த குளறுபடியால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. இவற்றை மீட்க கடனுதவி அறிவிப்பு மட்டும் பயன் தராது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை.

ஸ்டார்ட் அப் - தொழில்கள் முடங்கி நிற்கின்றன. அவைகளுக்கு மேலும் ஐந்தாண்டுகள் ஊக்குவிப்பு உதவி தேவை எனக் கோருவதை நிதிநிலை அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை.

இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் பாகுபாடு காட்டிவரும் ஒன்றிய அரசு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

பெரும் நிறுவனங்களின் கூடுதல் வரி ஐந்து சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது. சமூக உற்பத்தியில் உருவாகும் சொத்துக்களை குவித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலையில்லாமலும் வருமானம் இழந்தும் கதறி அழுதுவரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “பா.ஜ.க ஆட்சி யாருக்காக நடக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் பட்ஜெட்” : வேலைவாய்ப்புக்கு திட்டம் இல்லையா?