India

பறிபோன வேலை.. அதிகரித்த கடன் சுமை.. கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த தம்பதி - நடந்தது என்ன?

சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்திற்குட்பட்ட ஜான்ஜிகிரியைச் சேர்ந்தவர் சுஷில் யாதவ். இவரது மனைவி அனிதா. இந்த இளம் தம்பதிகள் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சுஷில் யாதவ் வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து சுஷில் யாதவ் மற்றும் மனைவி அனிதா ஆகியோர் ஃபிலை டவுனில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்குடித்தனம் சென்றனர். இந்நிலையில் இன்று இவர்களது வீடு வெகுநேரமாகத் திறக்கப்படாமல் உள்பக்கமாகப் பூட்டியே இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக் அனுப்பிவைத்தனர். பின்னர் போலிஸார் நடத்திய சோதனையில் தற்கொலைக்கு முன்பு தம்பதிகள் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், வேலையின்மையால் வீட்டில் கடன் தொல்லை அதிகரித்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: Accu Check ஆர்டர் போட்டவருக்கு சாக்லேட் அனுப்பி அதிர்ச்சி கொடுத்த அமேசான்; பரிதவிக்கும் முதியவர்!