India

நைட்டி திருடனை காட்டிக்கொடுத்த கேமரா.. பெரம்பலூரில் இருந்து கேரள போலிஸுக்கு தகவல் கொடுத்த பெண்!

கேரள மாநிலம், தலையோலப்பரம்பு பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ. இவரது மனைவி சூசாம்சா. இந்த மூதாட்டி தம்பதிகளுக்கு சோனா என்ற மகள் உள்ளார். இவர் திருமணமாகி பெரம்பலூரில் கணவருடன் வசித்து வருகிறார்.

இதையடுத்து வீட்டில் வயதான பெற்றோர் இருப்பதால் அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக வீட்டைச்சுற்றி கேமராக்களை வைத்துள்ளார். இதன் வழியாகத் தனது பெற்றோரை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் நைட்டி அணிந்து ஒரு ஆண் நிற்பதைத் தனது செல்போன் மூலம் கவனித்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், அவரது மூதாட்டி தம்பதியினர் வீட்டிற்கு வந்த போலிஸார் மொட்டை மாடியில் மறைந்திருந்த நைட்டி திருடனை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்சன் என்பது தெரியவந்தது.

மேலும், இவர் தனியாக இருக்கும் மூதாட்டிகள் வீட்டை குறிவைத்து நைட்டி அணிந்துகொண்டு சென்று நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து போலிஸார் நைட்டி திருடன் ராபின்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மேட்ரிமோனி மூலம் 35 பெண்களிடம் மோசடி செய்த ஆசாமி” : மாறுவேடத்தில் சென்று மடக்கிய போலிஸ் - நடந்தது என்ன?