India
உ.பியில் சறுக்கலைச் சந்திக்கும் யோகி - பா.ஜ.கவிலிருந்து அமைச்சர், MLAக்கள் என அடுத்தடுத்து 4 பேர் விலகல்!
உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி மாதம் 10ஆம் துவங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் பா.ஜ.கவின் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா அமைச்சர் பதவியில் இருந்து விலகியதுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷை சந்தித்துப் பேசினார்.
அதேபோல், ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி மற்றும் பகவதி சாஹர் ஆகிய எம்.எல்.ஏக்களும் பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இவர்களும் சமாஜ்வாதி கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
OBC பிரிவைச் சார்ந்த மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த சுவாமி பிரசாத் மவுரியா 5 முறை எம்.எல்.ஏ பதவி வகித்துள்ளார். கடந்த 2016ல் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய அவர், பா.ஜ.,வில் இணைந்தார்.
பா.ஜ.கவில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள மவுரியா, “யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். தாழ்த்தப்பட்டவர்கள், ஓ.பி.சி பிரிவினர், விவசாயிகள், சிறு தொழிலதிபர்கள் எதிர்ப்பு காரணமாக பா.ஜ.கவிலிருந்து விலகி உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சி மீது நிலவும் அதிருப்தி காரணமாக அடுத்தடுத்து பா.ஜ.கவினர் கட்சியிலிருந்து விலகி வருவது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.கவிற்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கோவா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க மூத்த தலைவர் மைக்கேல் லோபோ தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸில் இணையவிருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!