India

”ரூ.100க்கு சோப்பு வாங்கினால் ரூ.2 லட்சம் பரிசு” - சோப்பு வித்தை காட்டி நூதன மோசடி; சித்தூரில் பரபரப்பு!

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசாந்த் நகரைச் சேர்ந்தவர் நவீனா (31) என்ற இளம்பெண். இவரிடம் அண்மையில் 2 பேர் மலிவு விலையில் தரமான சோப்பு விற்பதாகச் சொல்லி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், நூறு ரூபாய்க்கு தரமான ஐந்து துணி சோப்புகள் விற்பதாகச் சொல்லி இருவர் தன்னை நாடியதால் அவர்களிடம் ரூ.100 கொடுத்து சோப்புகளை வாங்கினேன். அதன் பிறகு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள்.

அப்போது குலுக்கல் முறையில் விழுந்த சீட்டில் வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், பைக், தோசை தவா என 5 பொருட்கள் பரிசாக கிடைத்துள்ளதாக கூறியதால் ஆச்சர்யமுற்றேன். இதனையடுத்து தன்னிடம் இருந்து வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்களை பெற்றுச் சென்றனர்.

Also Read: செல்போன் தராததால் ஆத்திரம்.. முதியவரை வெட்டிக் கொலை செய்த இளைஞர் - தூத்துக்குடி அருகே ‘பகீர்’ சம்பவம்!

3 நாட்களுக்கு பிறகு சோப்பு விற்றவர்களிடம் இருந்து 2 லட்ச ரூபாய் மதிப்பில் உங்கள் பெயருக்கு 5 பொருட்கள் அடங்கிய பரிசு விழுந்துள்ளது. இதனை பெறவேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறார்கள்.

இதனை நம்பி குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பினேன். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அழைப்பு வந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் சந்தேகமுற்று புகாரளித்துள்ளேன்” என நவீனா தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிந்த சித்தூர் 2வது காவல் நிலைய போலிஸார் மோசடியில் ஈடுபட்டவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளனர். நவீனாவை போன்று லெனின் நகர் காலனியைச் சேர்ந்த தீபக் என்பவரும் இதேப்போன்று சோப்பு விற்பவர்களால் ஏமாற்றப்பட்டு 18,000 ரூபாயை இழந்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

Also Read: ’பாட்டால் வந்த வேட்டு’ : திருமணத்தன்றே விவாகரத்து செய்த மணமகன் - ஈராக்கில் நடந்த விநோத சம்பவம்!