India

இப்படியா சத்தம்போட்டு கொண்டாடுவீங்க? - தட்டிக்கேட்டவருக்கு கத்திக்குத்து; புதுவையில் போதை கும்பல் அராஜகம்

புதுச்சேரி, வில்லியனூர் மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சதீஷ் என்கிற மணிகண்டன். 27 வயதான இவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு மாதங்களாகி உள்ளது.

இவருடைய சகோதரி புற்றுநோயால் மறைந்து ஏழு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இவருக்கு முன்பக்கம் உள்ள வீட்டில், நண்பர்களுடன் சங்கர் - ரமணி தம்பதியினர் திருமண நாளை நடுரோட்டில் இரவு நேரத்தில் கொண்டாடியுள்ளார்.

மேலும் அதிக சத்தம் போட்டு குடிபோதையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி கொண்டாடியதை கண்டித்தும், தன்னுடைய வீட்டின் முன்பு இவ்வாறு செய்யாதீர்கள் என்றும் சதீஷ் என்கிற மணிகண்டன் தட்டிக்கேட்டு உள்ளார்.

இதனால் கோபமடைந்த ராஜா, அசார், தமிழ் ஆகிய மூன்று பேர் சதீஷை, கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி உள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த சதீஷை, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வில்லியனூர் மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன், ஆய்வாளர் ராமு, உதவி ஆய்வாளர் ராஜன் உட்பட காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சதீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காரணத்தினால் கொலை வழக்காக பதிவு செய்து, வில்லியனூர் மேற்கு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சதீஷ், ராஜா, தமிழ், அசார் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.