India

வேர்க்கடலை கடனை அடைக்க ஆந்திராவுக்கு பறந்த USரிட்டர்ன்; 12 ஆண்டுகளுக்கு முன் காக்கிநாடாவில் நடந்தது என்ன?

ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடாவைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த 2010ம் ஆண்டு கொத்தபள்ளியில் உள்ள கடற்கரைக்கு தனது 10 வயது மகனான நேமனி ப்ரனவுடனும் மகள் சுச்சிதாவுடனுன் சென்றுள்ளார்.

அப்போது கடற்கரையில் இருந்த ஜின்ஜாலபேட சத்தையா என்ற நபரிடம் இருந்து வேர்க்கடலை வாங்கியிருக்கிறார் ப்ரனவ். ஆனால் மோகன் பணம் கொண்டு வர மறந்திருக்கிறார். இதனை உணர்ந்த சத்தையா மறுமுறை வரும்போது பணம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார்.

இதனையடுத்து வீடு திரும்பிய பிறகு மோகன் குடும்பத்தினர் எதிர்ப்பாராத விதமாக அமெரிக்காவுக்கு திரும்பச் சென்றிருக்கின்றனர். ஆனால் அந்த வேர்க்கடலை வியாபாரிக்கு கொடுக்க வேண்டிய ரூ.25ஐ கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் மோகன் உறுதியாக இருந்திருக்கிறாராம்.

மீண்டும் காக்கிநாடா வந்தபோது வியாபாரி சத்தையா அந்த கடற்கரையில் இல்லாமல் போயிருக்கிறார். அதன் பிறகு சத்தையாவை கண்டுபிடிப்பதற்காக மோகன் தனது நண்பரான காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த YSR காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரசேகர் ரெட்டியின் உதவியை நாடியிருக்கிறார்.

அதன்படி முன்பு கடற்கரையில் வேர்க்கடலை வாங்கிய போது ப்ரன்வுடன் சத்தையா இருக்கும்படி மோகன் எடுத்த புகைப்படத்தை எம்.எல்.ஏ சந்திரசேகர் ரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் அவரது உதவியாளரான கோவிந்தராஜலுவிடமும் கூறி அந்த வியாபாரியை தேடச் செய்திருக்கிறார்.

சத்தையாவின் புகைப்படத்தை கண்ட நகுலப்பள்ளி கிராம மக்கள் உதவியாளர் கோவிந்தராஜலுவிடம் சத்தையாவின் குடும்பத்தினர் குறித்து கூறியிருக்கிறார்கள். அப்போது சத்தையா 2 ஆண்டுகளுக்கு முன்புதான் உயிரிழந்திருக்கிறார் என தெரியவந்திருக்கிறது.

இதனையறிந்த 21 வயதான் ப்ரனவ்வும் அவரது சகோதரியும் சத்தையாவின் குடும்பத்தினரை சந்தித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு பாக்கி வைத்த 25 ரூபாய்க்கு பதிலாக 25 ஆயிரமாக ரூபாயாக திருப்பி செலுத்தியிருக்கிறார்கள். இந்த சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.