India

“காதலுக்கு இடையூறு செய்த அக்கா - எரித்து கொலை செய்த தங்கை”: கேரளாவில் நடந்த பகீர் சம்பவம் - பின்னணி என்ன?

கேரள மாநிலம் பரவூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தன். இவரது மனைவி ஜிஜி. இந்த தம்பதிக்கு விஸ்மயா, ஜித்து என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கணவன், மனைவி இருவரும் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அக்கா விஸ்மயாவும், தங்கை ஜித்துவும் மட்டுமே தனியாக இருந்துள்ளனர்.

பின்னர் பெற்றோர்கள் வீடு திரும்பியபோது, மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இளைய மகளும் காணவில்லை. இதனால் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஜித்துவை தேடிவந்தனர். பின்னர் காக்க நாடு பகுதியிலிருந்த அவரை போலிஸார் கண்டுபிடித்தனர். பிறகு போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

ஜித்து ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த விஸ்மயா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அக்கா மீது ஜித்து கோவத்திலிருந்து வந்துள்ளார். தனது காதலைக் கெடுத்துவிட்டதால் வீட்டில் தனியாக இருந்தபோது விஸ்மயாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் வீட்டிலிருந்த மண்ணெண்ணை எடுத்து அக்காவின் உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து ஜித்து தப்பிச் சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: மகளின் காதலனை கொலை செய்துவிட்டு திருடன் என நாடகமாடிய தந்தை... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!