India

நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்த நாளை கொண்டாடிய வாலிபர்.. தேடுதல் வேட்டையில் புதுவை போலிஸார்..!

புதுச்சேரி கருவடிக் குப்பத்தை சேர்ந்தவர் தர்மசீலன் (19). இவர் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது நண்பர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தனர்.

அந்த வீடியோவில் தர்மசீலன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை தூக்கி தூரமாக வீசுகிறார். அந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

அதன்பின் அவர் அங்கிருந்து நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து தர்மசீலனை போலிஸார் தேடி வருவதாகவும் அவருக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பதெல்லாம் அவரை பிடித்த பிறகே தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.

புது மாதிரியாக பிறந்தநாளுக்காக நாட்டு வெடிகுண்டு வீசி வெடிக்க செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள தர்மசீலன் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தகது.