India

"கொரோனா யாரையும் விட்டுவைக்காது".. மனைவி, மகள்களை கொலை செய்த மருத்துவர்: உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் சுஷில்குமார். இவரது மனைவி சந்திரபிரபா. இந்த தம்பதிக்கு ஷிகார் சிங், குஷி சிங் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா நோய் காரணமாக மருத்துவர் சுஷில்குமார் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் தேனீரில் விஷம் கலந்து கொடுத்து மனைவி மற்றும் இரண்டு மகள்களை அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர், இது குறித்து போலிஸாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் அங்கு சென்று பார்த்தபோது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்துள்ளனர்.இதையடுத்து மூன்று பேரின் உடல்களை போலிஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் சுஷில்குமார் எழுதிய டைரி ஒன்றையும் போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், "கொரோனா தொற்று யாரையும் விட்டு வைக்காது. எனது குடும்பத்தைச் சிரமத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. இதனால் தான் மனைவி மற்றும் மகள்களைக் கொலை செய்துவிட்டேன். தாம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்" என எழுதப்பட்டுள்ளதாக போலிஸார் கூறியுள்ளனர்.

பிறகு மருத்துவர் சுஷில்குமாரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக மனைவி மற்றும் மகள்களைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பொதுமக்கள் 13 பேரை சுட்டுக்கொலை செய்த ராணுவம்: நாகாலாந்து கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?