India

“என்னையே எதிர்த்துப் பேசுறியா”.. தலித் தொழிலாளியின் கை துண்டாக வெட்டிய கொடூரம் : ம.பி-யில் அதிர்ச்சி!

மத்திய பிரதேச மாநிலம், ரோவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக். கட்டடத் தொழிலாளியான இவர் கணேஷ் மிஸ்ரா என்பவர் வீட்டில் வேலை பார்த்துள்ளார். இதற்காக இவருக்கு ரூ.15 ஆயிரம் கூலி பேசப்பட்டுள்ளது.

ஆனால், கணேஷ் மிஸ்ரா பேசிய பணத்தைக் கொடுக்காமல் ரூ. 6 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதி பணத்தை சில நாள்கழித்து தருவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த சனிக்கிழமையன்று அசோக் மீதி பணத்தைக் கேட்பதற்காக கணேஷ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் மிஸ்ரா வீட்டில் இருந்த வாலை எடுத்து அசோக்கின் கழுத்தை நோக்கி வீசியுள்ளார். இதைத் தனது இடதுகையால் தடுக்க முயன்றபோது அவரது கை துண்டாகி கீழே விழுந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து, உடன் வந்த அவரது சகோதரர் அசோக்கை மீட்டு உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். பின்னர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரை அடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த கணேஷ் மிஸ்ராவை கைது செய்தனர். மருத்துவமனையில் கட்டிடத் தொழிலாளி அசோக்கிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: இறந்ததாக நினைத்து 7 மணி நேரம் பிணவறை ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நபர்: உ.பி-யில் நடந்த அவலம்!