India

இளம் பிள்ளைகளை தனிமையில் இருக்க அனுமதிக்காதீர்” - இளைஞரின் செயலால் பெற்றோர்களுக்கு புதுவை போலிஸ் வார்னிங்

புதுவை வில்லியனூர் மங்கலம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் தீபக். 22 வயதான இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து உள்ளார். இவர் கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தினரிடம் பேசாமல் கோபத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்ற தீபக் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபக் அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை பார்த்து அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக புதுவை மங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் ஆன்லைன் கேம் விளையாடியது, அதன் விளைவாக கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு தீபக் தற்கோலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அதிகமாக செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் கேம் விளையாட அனுமதிக்க வேண்டாம், மேலும் பிள்ளைகளை தனிமையில் இருக்கவும் அனுமதிக்க வேண்டாம் என்று புதுச்சேரி மங்கலம் போலீசார் அறிவுரை கூறியுள்ளனர்.

Also Read: விபத்தில் சிக்கிய பெண்ணை உடனடியாக மீட்டு முதலுதவி அளித்த தி.மு.க எம்.எல்.ஏ: எண்ணூரில் நெகிழ்ச்சி சம்பவம்!