India

“மத உணர்வு புண்படுது.. ஹோட்டல்களில் இறைச்சி உணவுகளை வெளியில் வைக்கக்கூடாது” : குஜராத்தில் அதிர்ச்சி!

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்திற்குட்பட்ட வதோதரா மற்றும் ராஜ்கோட் மாநகராட்சிகளில் உள்ள உணவகங்களில் இனி அசைவ உணவுகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என அம்மாநகராட்சிகளின் மேயர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இது குறித்து ராஜ்கோட் மேயர் பிரதிப் டேவ், "பெரும்பாலான மக்கள் இந்த கடைகளைக் கடந்து செல்லும்போது அசைவ உணவின் வாசனையால் வெறுப்பு உணர்வு அடைகிறார்கள். மேலும் கடைகளில் கோழி, மீன், முட்டைகளைக் காட்சிப்படுத்துவது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

எனவே இறைச்சி உணவுகளைக் கடைகளில் காட்சிப்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை 15 நாட்களுக்குள் கடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை அடுத்து இறைச்சிக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் பா.ஜ.கவினர் மக்களின் உணவு உரிமையில் வேண்டுமென்றே தலையிடுவதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி இறைச்சிக்கடைகளில் இறைச்சிகளைக் காட்சிப்படுத்துவதற்குத் தடை விதிப்பது எந்த வகையில் சரியாது. ஏன் தனிநபர் உணவுகளில் தலையிடுகிறீர்கள் என பா.ஜ.க அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “விவாகரத்து வாங்கிய மனைவியை நடுரோட்டில் குத்திக்கொலை செய்த கணவர்” : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!