India

"எங்களுக்கு இந்தி தெரியாது... தலைமைச் செயலாளரை மாற்றுங்க" : அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய மிசோரம் முதல்வர்!

மிசோரம் மாநிலத் தலைமைச் செயலாளராக லால்னும்மாவியா சுவாகோ இருந்தார். இவர் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைமைச் செயலாளராக ரேணு சர்மாவை ஒன்றிய அரசு நியமனம் செய்துள்ளது.

இந்நிலையில், எங்களுக்கு இந்தி தெரியாது. எங்கள் மாநில மொழி தெரிந்தவரை தலைமைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் எனக் கோரி மிசோரம் மாநில முதல்வர் ஜோரம்தங்கா ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "தலைமைச் செயலாளர் லால்னுன்மாவியா சுவாகோ ஓய்வுக்குப் பிறகு என்னுடைய தனிச்செயலாளர் ஜே.சி.ராம்தங்காவை நியமிக்குமாறு நான் கோரியிருந்தேன். ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் ரேணு ஷர்மாவை மிசோரம் தலைமைச் செயலாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.

மிசோரம் மக்களுக்கு இந்தி தெரியாது. எனது அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் இந்தி தெரியாது. இதில் சிலருக்கு ஆங்கில மொழியிலும் பிரச்சனை உள்ளது. இதனால் மிசோரம் மொழி தெரியாத தலைமைச் செயலாளரால் திறம்படச் செயல்பட முடியாது.

மேலும் மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்தே மிசோரம் மொழி தெரியாதவரை ஒன்றிய அரசு நியமித்தது இல்லை. இது காங்கிரஸ், பா.ஜ.க என எந்த அரசாக இருந்தாலும் சரி மிசோரம் மாநிலம் உருவானதிலிருந்தே இந்த நடைமுறை உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் மிசோரம் அரசு தான் ஒன்றிய அரசுக்கு நட்புக்கரம் நீட்டி வருகிறது. எனவே தலைமைச் செயலாளரை மாற்றி மிசோரம் மொழி தெரிந்தவரை நியமிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “நாய் செத்தால்கூட இரங்கல்.. விவசாயிகள் இறந்தால் வருத்தப்படமாட்டார்கள்” : பா.ஜ.கவை விளாசிய மேகாலயா ஆளுநர்!