India

நூதன முறையில் ரூ.6 லட்சம் மோசடி... பெண்ணை ஏமாற்றிய போலி கடற்படை அதிகாரி.. நடந்தது என்ன?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்ரிமோனி மூலம் வரன் தேடி வந்துள்ளார். இதனால் அவருக்குப் பலரும் போன் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அலெக்ஸ் பட்டேல் என்பர் அந்தப் பெண்ணுக்கு போன் செய்துள்ளார்.

அவர் தன்னை கடற்படை அதிகாரியாக தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்துள்ளனர். பின்னர் அலெக்ஸ் காதலிப்பதாக அந்தப் பெண்ணை நம்பவைத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண்ணின் பிறந்தநாளுக்கு, தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை அன்பளிப்பாக அளிப்பதாகக் கூறியுள்ளார்.

இவர் கூறிய அடுத்த சில நாட்களிலேயே அந்தப் பெண்ணுக்கு கூரியர் கம்பெணி ஒன்றில் இருந்து போன் வந்துள்ளது. அப்போது செல்போனில் பேசிய நபர், "உங்களுக்கு கூரியரில் பார்சல் வந்துள்ளது. அதில் தங்க நகைகள், 30 ஆயிரம் அமெரிக்க டாலர் கரன்சி வந்துள்ளது.

இந்த பார்சலை டெலிவரி செய்ய வேண்டும் என்றால் சுங்கவரி ரூ.6.25 லட்சம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். உடனே அந்த பெண் அலெக்ஸுக்கு போன் செய்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

அப்போது அலெக்ஸ், "நான் அனுப்பிய பார்சல்தான். அந்த கூரியர் கம்பெனி கூறிய எண்ணிற்குப் பணம் செலுத்திவிட்டு பார்சலை பெற்றுக்கொள்" எனத் தெரிவித்துள்ளார். உடனே அவரும் ரூ.6.25 லட்சத்தைச் செலுத்தியுள்ளார். பிறகு அலெக்ஸுக்கு போன் செய்தபோது அவரது எண் அஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்த போலி கடற்படை அதிகாரியை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: வாட்ஸ்ஆப்பில் முகம் தெரியாத பெண்ணிடமிருந்து வந்த ‘மெசேஜ்’.. 5 லட்சம் ரூபாய் பறிபோன சம்பவம்: நடந்தது என்ன?