India

“மோடி அரசால் சாலையில் பயணம் செய்வதே சிரமமாகிவிட்டது” : பெட்ரோல் விலை உயர்வுக்கு பிரியங்கா காந்தி கண்டனம்!

இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.105.95 ஆகவும் உயர்ந்து உள்ளது. மேலும் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் விலையைவிட வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு பெட்ரோல் விலை ரூ. 44. 68 காசு உயர்ந்துள்ளது. அதேபோல் பெட்ரோல் விலையும் ரூ.41.18 காசு உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சாலையில் செல்வதற்கே பெரும்பாடாகிவிட்டதாக ஒன்றிய பா.ஜ.க அரசை விமர்சித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டரில், “ஹவாய் செருப்புகள் அணிந்த மக்கள் விமானத்தில் பயணம் செய்வார்கள் என்றெல்லாம் பா.ஜ.க அரசு உறுதியளித்தது. ஆனால், பா.ஜ.க அரசு பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை அதிகப்படுத்தியதால், இப்போது ஹவாய் செருப்பு அணிந்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சாலையில் பயணம் செய்வதே பெரும்பாடாகிவிட்டது.

பா.ஜ.க விலையுயர்ந்த நாட்களைக் கொண்டுவந்துவிட்டது. டெல்லியில் விமான எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.79, ஆனால் பெட்ரோல் விலையோ லிட்டருக்கு ரூ.105.84 விற்கப்படுகிறது என பதிவிட்டுள்ளார். அதேபோல் மக்கள் வீழ்ச்சியடையும் நிலையில் பெட்ரோல் விலையை ஒன்றிய பா.ஜ.க அரசு உயர்த்தி வருகிறது என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: “மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் - டீசல் விலை” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!