India

கேரளாவில் கனமழை : கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் 8 பேர் பலி.. பலர் மாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பீர்மேடு, குட்டிக்கானம், வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குமுளி - கோட்டயம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

கேரளாவில் பல இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக கோட்டயம் மாவட்டம் கோட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூன்று வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நான்கு பேரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இடுக்கி கொக்கையாறு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 பேரைக் காணவில்லை. தொடுபுழையில் கார் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடுக்கி மாவட்டம் பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் 10 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம்புலன்ஸ், படகு உள்ளிட்டவற்றுடன் ஆலப்புழா, எர்ணாகுளம் பகுதிகளில் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

கனமழை காரணமாக, மணிமலயார் மற்றும் மீனச்சில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடம்நோக்கி சென்றுள்ளனர்.

கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பேரிடர் மேலாண்மை குழு மீட்புப் பணிகளுக்காக விரைந்துள்ளது. விமான படை வீரர்கள் கோவையில் தயாராக உள்ளனர். வானிலை மிகவும் மோசமாக உள்ளதால் ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மிக கனமழை: அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் இதோ!