India

பேக் திருடனை பிடிக்க முயன்ற நபர்.. இறுதியில் காத்திருந்த சோகம் - மும்பையில் அதிர்ச்சி சம்பவம்!

திருமணமாகி ஒரு வருடமே ஆன நபர், திருடனை பிடிக்கச் சென்றபோது, குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள விலே பார்ஷலே என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷல். திருமணமாகி ஒரு வருடமே ஆன இவர், தன்னுடைய மனைவி, மாமியாருடன், மனைவியின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் வீடு திரும்புவதற்கு, விரார் ரயில் நிலையம் வந்தபோது, திருடன் ஒருவன், ஹர்ஷலின் கைப்பையை திருடிச் சென்றுள்ளான். இதையடுத்து, அந்த திருடனை பிடிப்பதற்காக ஹர்ஷல் துரத்திச் சென்றுள்ளார். அவருடன் சேர்ந்து, பயணிகள் சிலரும், அந்த திருடனை பிடிப்பதற்கு முயன்றுள்ளனர்.

ரயில் நிலையத்தை தாண்டி இருட்டான பகுதிக்குள் ஓடிய திருடனை, விடாமல் துரத்திப் பிடித்தார் ஹர்ஷல். இதனால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் இருந்த திருடன், தன்னிடமிருந்த கத்தியை எடுத்து ஹர்ஷலை சரமாரியாக குத்திவிட்டு தப்பிக்க முயன்றான்.

ஆனால் அதற்குள் மற்ற பயணிகள் அங்கு வந்து திருடனை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்த ஹர்ஷல் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், திருடனை கைது செய்துள்ளனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருடனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். திருடனைப் பிடிக்க முயன்றபோது, குத்திக் கொலை செய்யப்பட்ட ஹர்ஷல், சமீபத்தில்தான் திருமண நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- கார்த்திகேயன்

Also Read: “சாம்பார் நல்லா இல்ல” : ஆத்திரத்தில் தாய், தங்கையை சுட்டுக்கொன்ற இளைஞர் - கர்நாடகாவில் ‘பகீர்’ சம்பவம்!