India

அசிங்கப்பட்ட மோடி... விலை போகாத பொருட்கள்... போலியாக ஏலம் கேட்ட நபர்களால் விழிபிதுங்கிய அதிகாரிகள்!

பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்பட்ட நிலையில், அதில் பல பொருட்கள் ஏலத்தில் விலை போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 1,300க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட இணையதளம் வாயிலாக நடத்தப்படும் ஏல முறை கடந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது.

டோக்கியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள், போட்டிகளில் தாங்கள் பயன்படுத்திய உபகரணங்களை பிரதமர் மோடிக்கு வழங்கினர். அந்தப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.

மேலும், பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் ஏலம் விடப்பட்டன. ஏலத்தின் மூலம் கிடைக்கும் நிதி கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ‘நவாமி கங்கா’ திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏலத்தில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல பரிசுப் பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆட்கள் முன்வரவில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடி இருப்பது போன்ற ஓவியத்திற்கு ரூ.3.50 லட்சம் அடிப்படை விலை வைக்கப்பட்டது. இதை வாங்க ஆளில்லை.

பி.வி.சிந்து வழங்கிய பாட்மிண்டன் ராக்கெட் ரூ.80 லட்சத்துக்கு அடிப்படை விலை வைக்கப்பட்டது. இதையும் வாங்க யாரும் முன்வரவில்லை. நேற்றைய நிலவரப்படி, 1,348 பொருட்களை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை.

ஆனால், கலாச்சாரத்துறை அமைச்சகம், 1,083 பொருட்களுக்கு ஏற்கெனவே ஏலம் கேட்கப்பட்டுள்ளது. 162 பொருட்களுக்கு மட்டும்தான் யாரும் ஏலம் கேட்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

ரூ.5000 முதல் ரூ.90 லட்சம் வரை அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட பல பொருட்களை வாங்க மக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஒவியங்கள், புகைப்படங்கள், பிரதமர் மோடி தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் ஆகியவையும் விற்பனையாகவில்லை.

ஏலம் தொடங்கிய முதல் வாரத்தில் சில பொருட்களுக்கு ஏலத்தில் போட்டி இருந்தது. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டி ரூ.1 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டு, அது ரூ.1 கோடியே 50 ஆயிரத்துக்கு ஏலம் போனது.

ஒலிம்பிக் குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினா பயன்படுத்திய கிளவுஸ் ரூ.80 லட்சத்துக்கும், ஆடவர், மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் பயன்படுத்திய அவர்கள் கையொப்பமிட்ட ஹாக்கி மட்டைகள் ஒவ்வொன்றும் ரூ.80 லட்சத்துக்கும் ஏல அடிப்படைத் தொகையாக வைக்கப்பட்டது. ஆனால், யாரும் இவற்றை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இவற்றில் பல பொருட்கள் பல கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவ்வாறு ஏலம் எடுப்பதாக கூறியவர்களின் பின்புலத்தை விசாரித்தபோது அவை போலியானவை என்பது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: "RSS தொண்டர்கள் அரசு அதிகாரிகளாக ஊடுருவியுள்ளனர்.. மோடி கைப்பாவை" : குமாரசாமி பகிரங்க குற்றச்சாட்டு!