India

இந்தியாவின் பார்வையில் இருந்து மறைக்கப்படுகிறதா லக்கிம்பூர்? : பா.ஜ.கவின் கேவலமான அரசியல் இதுதான்!

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.

லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமமான பன்வீர்பூரில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்.

அப்போது அந்தவழியாக வந்த பா.ஜ.க அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால் அங்கு வன்முறை வெடித்ததில் பலர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்திய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை சந்திக்க, அகிலேஷ் யாதவ் லக்கிம்பூர் செல்ல இருந்தார். அவரை உ.பி போலிஸார் தடுத்து நிறுத்தி பின்னர் வீட்டுக்காவலில் வைத்தனர்.

வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, போலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது பிரியங்கா போலிஸாருடன் கடும் வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லக்கிம்பூர் செல்ல முயன்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார், இதனையடுத்து விமான நிலையத்திலேயே அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் உள்ளிட்டோருக்கும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு லக்கிம்பூர் நிகழ்வை இந்தியாவின் பார்வையிலிருந்தே மறைக்கும் முயற்சியில் உ.பி பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அரசை விமர்சிப்போர் மீதெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

Also Read: விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்தவரை கைது செய்யாதது ஏன்? : மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி!