India

5வது திருமணத்திற்கு ரெடியான போலிஸ்காரர்... 4வது மனைவி கொடுத்த புகாரால் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் அப்பள ராஜூ. இவர் ஏற்கனவே நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

மேலும் இந்த திருமணங்கள் குறித்து மற்ற பெண்களுக்குத் தெரியாத வகையில் இவர்களுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் 4வது மனைவி பத்மா கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து அப்பள ராஜூ கருவைக் கலைக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பும் நான்கு முறை கர்ப்பமடைந்தபோதும் கருவைக் கலைத்துள்ளார். மீண்டும் கருவைக் கலைக்கச் சொன்னதால் சந்தேகமடைந்த பத்மா இதற்கான காரணம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போதுதான் அப்பள ராஜூக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆகி ஐந்து பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தன்னை நான்காவதாகத் திருமணம் செய்துள்ளார் என்பதை அறிந்து பத்மா அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து ஐந்தாவதாக சக காவலர் ஒருவதை திருமணம் செய்து கொள்வதற்கான முயற்சியில் அப்பள ராஜூ இருந்து வந்ததும் பத்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் கணவர் மீது திஷா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் அப்பள ராஜூவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “சிகரெட் தர்றியா.. இல்லையா” : இளம்பெண்ணை அடித்தே கொன்ற வாலிபர்.. டெல்லியில் ‘பகீர்' சம்பவம்!