India

சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டி.. நடிகர் ஷாருக்கான் மகன் கைது: நடுக்கடலில் நடந்தது என்ன?

மும்பையிலிருந்து நேற்று மதியம் 'எம்பிரஸ்' என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் மூன்று நாள் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கலை நெருக்கியபோது பயணிகளில் சிலர் தடை செய்யப்பட்ட கொக்கைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து போலிஸார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பலரும் சினிமா, ஃபேஷன் துறைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் இந்த பார்டியில் கலந்து கொண்டவர்களில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்துள்ளார்.

இதனால் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கப்பல் முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்தனர். கப்பலில் எப்படி போதைப் பொருட்கள் வந்தது என்பது குறித்தும் கப்பல் உரிமையாளரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கப்பலை கோவாவுக்கு அதிகாரிகள் பயணிக்க விடாமல் பாதியிலேயே திருப்பி மீண்டும் மும்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனால் போதை பார்ட்டியில் கலந்து கொண்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் கைது செய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Also Read: தொழிலதிபரை அடித்துக் கொன்று காரில் வைத்து எரித்த மனைவி, மகன்கள் - விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!