India

“இவங்க கூட எல்லாம் சேரக்கூடாது” : மருத்துவ மாணவர்களைத் தாக்கி மதவெறி கும்பல் அட்டூழியம்!

கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆறு மாணவர்கள் கடந்த ஞாயிறன்று மல்பே கடற்கரைக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களை வழிமறித்து காரை நிறுத்தியுள்ளனர்.

மேலும் காரில் இருந்தவர்களின் பெயர் மற்றும் அவர்களின் மதங்கள் குறித்துக் கேட்டுள்ளனர். காரில் இரண்டு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் மற்ற மாணவர்களிடம் ஏன் இவர்களுடன் சேர்கிறீர்கள் எனக் கேட்டு தாக்கியுள்ளனர். இதனால் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தை பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு பெருமை பேசியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து போலிஸார் ஐந்து பேரை கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "மருத்துவ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சாதாரண வழக்குகளை போலிஸார் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களை ஜாமினில் விடுவித்துள்ளனர்.

எனவே இவர்களை மீண்டும் கைது செய்து உரிய தண்டனை வழங்கவேண்டும். பா.ஜ.கவும், பஜ்ரங்தள் அமைப்பினரும் கர்நாடகத்தில் மணல் திருட்டு மாஃபியா, மற்றும் ரவுடிகளை வளர்த்து வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: நிறுத்தப்படும் பிரசார் பாரதி சேவை; வேளாண் தொழிலை கெடுப்பதற்கான விபரீத யோசனை? - மோடி அரசுக்கு கண்டனம்!