India

இதுவும் தாஜ்மஹால்தான்... கொரோனாவால் இறந்த மனைவிக்கு கோயில் கட்டிய காதல் கணவர்!

காதல் மனைவி மும்தாஜின் நினைவாக மன்னர் ஷாஜகான் ஆக்ராவில் தாஜ்மஹால் கட்டினார். இன்றுவரை தாஜ்மஹால் காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில்ஷாஜகானை பின்பற்றி இந்தியாவில் பலரும் தற்போது தங்கள் அன்பு மனைவிக்குக் கோவில் கட்டி தங்களின் காதலை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

அந்த வகையில் மத்திய பிரதேசம் ஷாஜபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் இறந்த தனது மனைவியின் நினைவாக கோயில் கட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சம்பகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவரது மனைவி கீதாபாய். கொரோனா இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது கீதாபாய் தொற்று பாதித்து உயிரிழந்தார்.

இதனால் மனைவியின் பிரிவை ஏற்க முடியாத நாராயண் சிங், மனைவி இறந்த மூன்றாவது நாளே ஒரு சிற்பியைச் சந்தித்து, மனைவிக்கு சிலை வடிக்கும்படி தெரிவித்துள்ளார். பிறகு அந்த சிற்பி இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாராயண் சிங்கிடம் சிலையை ஒப்படைத்துள்ளார். இந்த சிலை சுமார் மூன்று அடி உயரம் கொண்டது.

தனது வீட்டின் அருகே மனைவியின் சிலையை வைத்து கோவில் கட்டி தினமும் வழிபட்டு வருகிறார். மேலும் குடும்ப உறுப்பினர்களும் கீதாபாய் சிலைக்கு அனைத்து சடங்குகளையும் செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றச்சம்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், இறந்த மனைவிக்குக் கணவன் சிலை வைத்து வழிபட்டு வருவது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நோஸ்ட்ராடமஸ்ஸின் ‘தீர்க்கதரிசனங்கள்’ உண்மையா ?” - யார் இந்த Nostradamus?