India

“ரூ.2.62 லட்சம் கோடி பேங்க்ல மாட்டிக்கிச்சு.. 10 கோடி கொடுத்தா மீட்டுடுவேன்” : பயங்கர மோசடி மன்னன் கைது!

கேரளாவில் பழங்கால பொருட்ளை விற்பதாக கூறி ரூ.10 கோடி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் கொச்சி, கலூர் பகுதியில் பழங்கால பொருட்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். தன்னிடம் பலநூறு ஆண்டுகள் பழமையான பொருட்கள் இருப்பதாகவும், மன்னர் கால கலைப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் கூறிவந்துள்ளார்.

இதன் காரணமாக பல முக்கிய பிரமுகர்கள் இவரது வீட்டுக்கும், விற்பனை நிலையத்துக்கும் வந்து சென்றனர். நடிகர், நடிகைகளும் இக்கலை பொருட்களைப் பார்க்க வந்து சென்றுள்ளனர்.

அவ்வாறு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் நடிகர், நடிகைகளுடன் மோன்சன் மாவுங்கல் புகைப்படம் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவற்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டு தனக்கு பெரும் செல்வாக்கு இருப்பது போல காட்டிவந்துள்ளார்.

இந்நிலையில் இவர் விற்பனை செய்த பல பொருட்கள் போலியானது என தெரியவந்ததால் இதுபற்றி கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பலர் போலிஸில் புகார் செய்தனர்.

அவர்களது புகாரில், “மோன்சன் மாவுங்கல் வளைகுடா நாடுகளில் உள்ள மன்னர் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு பழங்கால பொருட்களை விற்பனை செய்ததாகவும், இதன் மூலம் டெல்லியில் உள்ள அரசு வங்கியில் ரூ. 2,62,000 கோடி மாட்டிக்கொண்டதாகவும் ரூ.10 கோடி தந்தால், பணத்தை மீட்டு, வட்டியில்லாமல் தொழில் செய்ய கடன் தருவதாவும் கூறினார்.

அவரது பேச்சை நம்பி நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி எங்களுக்கு தொழில் செய்ய கடன் தரவில்லை. மேலும் நாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. அவர் விற்கும் பொருட்களும் போலி” எனத் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து கொச்சி குற்றப்பிரிவு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மோன்சன் மாவுங்கல் பலரிடம் பண மோசடி மற்றும் போலி புராதன பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோன்சன் மாவுங்கலை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல முக்கிய பிரமுகர்களுடனும், திரையுலக பிரபலங்களுடன் தொடர்பு இருப்பதால் அவர்களிடமும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

Also Read: காதலி மரணம்... மன உளைச்சலில் கருவேலமரத்தில் தூக்கிட்டு காதலன் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!