India

அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. புகார் கொடுத்த 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்ட போலிஸ்: நடந்தது என்ன?

சென்னை அடுத்து அம்பத்தூரில் வசித்து வருபவர் மிதிலேஷ். இவரது மனைவி மீராதேவி. பீகாரைச் சேர்ந்த இந்த தம்பதிக்கு விஷ்ணு, ஷியாம் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டின் மேல்மாடியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஷிவ்குமார், மோனு தம்பதி வசித்து வருகிறார்கள். மிதிலேஷ், மீராதேவி வேலைக்குச் செல்வதால் தங்களின் இரண்டு குழந்தைகளையும் ஷிவ்குமார் வீட்டில் விட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளனர்.

இதன்படி நேற்று முன்தினம் குழந்தையை ஷிவ்குமார் வீட்டில் விட்டுச் சென்றனர். பிறகு வேலை முடிந்து வந்து பார்த்த போது இளையமகன் ஷியாம் இல்லாததைக் கண்டு மிதிலேஷ் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மூத்த மகனிடம் கேட்டபோது ஷிவ்குமார்தான் தம்பியைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர் பல இடங்களிலும் தேடி பார்த்தும் இருவரும் காணவில்லை. மேலும் அம்பத்தூர், பெரம்பூர், சென்டரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் தேடிபார்த்துள்ளனர். பிறகுதான் குழந்தையை ஷிவ்குமார் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.

பின்னர் அடுத்த நாள் மிதிலேஷ் இது குறித்து அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலிஸார் உடனே தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். ஷிவ்குமாரின் செல்போன் சிக்னலை கொண்டு விசாரணை துவக்கியதில் அவர் ரயிலில் நாக்பூர் சென்று கொண்டிருப்பது தெரிந்தது.

உடனே தமிழ்நாடு போலிஸார், நாக்பூர் போலிஸாருக்கு தகவல் தொடுத்தனர். பிறகு நாக்பூர் ரயில் நிலையத்தில் ஷிவ்குமாரை போலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பிறகு அவரிடம் இருந்து குழந்தைய மீட்டனர்.

மேலும் தனக்குக் குழந்தை இல்லாததால் குழந்தையைக் கடத்தியதாக ஷிவ்குமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்பத்தூர் போலிஸார் குழந்தையின் பெற்றோரை அழைத்துக் கொண்டு நாக்பூர் சென்றுள்ளனர். புகார் கொடுத்த நான்கு மணி நேரத்திலேயே குழந்தை மீட்ட தமிழ்நாடு போலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: பானிபூரி பிரியர்களே உஷார்: கெட்டுப்போன மசாலாக்குள் புழு; சென்னையில் வட மாநில இளைஞரை துவம்சம் செய்த மக்கள்