India

மோசடி செய்து திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவி பெற்ற நபர்: பதறியடித்து விளக்கம் கொடுத்த ஒன்றிய அமைச்சர்!

ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள திருமலை கோவிலின் தேவஸ்தான நிர்வாகிகள் அண்மையில் நியமிக்கப்பட்டனர். 29 உறுப்பினர்கள் கொண்டு அறக்கட்டளை அமைத்த மாநில அரசு, 52 சிறப்பு அழைப்பாளர்களையும் நியமித்தது.

இந்த 52 பேரில் யெலிஷாலா ரவிபிரசாத் என்பவரும் ஒருவர். இவர் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டியின் பெயரை பயன்படுத்தி இந்த பதவியைப் பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், திருமலை தேவஸ்தான நிர்வாகிகள் உறுப்பினருக்குத் தான் யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என விளக்கி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டியின் கடிதத்தில், "ஒன்றிய அமைச்சகத்தின் பரிந்துரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானங்களுக்குச் சிறப்பு அழைப்பாளராக யெலிஷலா ரவி பிரசாந் நியமிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது எனது கவனத்திற்கு வந்தது.

ஆனால் தான் யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை. ஒன்றிய அமைச்சகமும் அவருடைய பெயரை முன்மொழியவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன். எனது பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: உ.பி-யில் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வழக்குப் பதிய மறுத்த போலிஸ் - நாகூசாமல் பொய் பேசும் யோகி!