India

ஜாமினில் வெளிவந்த பாலியல் வன்கொடுமை குற்றவாளி... மன உளைச்சலில் சிறுமி எடுத்த விபரீத முடிவு!

மகாராஷ்டிரா மாநிலம், ஜாரிபட்கா பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது தந்தை மற்றும் அவரது இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்தார். இவர்களுடன் இரண்டாவது மனைவியின் சகோதரரும் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மாற்றாந்தாயின் சகோதரர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை போலிஸிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் மீது போலிஸார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், அந்த நபர் அண்மையில் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இதனால் சிறுமி நீண்ட நாட்களாகத் தொடர்ந்து மன உளைச்சலில் சிக்கித் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமையன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி ஜாமினில் வெளியே வந்ததால் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: டெல்லிவரை செல்வாக்கு இருக்கு.. மருத்துவ சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பா.ஜ.க தம்பதி!