India

“முதல்ல சல்யூட் அடிங்க” : பாதுகாப்புக்கு வந்த போலிஸிடம் திமிராக நடந்துகொண்ட பா.ஜ.க எம்.பி சுரேஷ்கோபி!

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் சுரேஷ்கோபி, பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் பார்த்ததைவிட சினிமா மற்றும் டி.வி நிகழ்ச்சிகளிலேயே நடிகர் சுரேஷ்கோபியை அதிகம் பார்ப்பதாக கேரள மக்கள் சமீபத்தில் குற்றம்சாட்டினர்.

ஆனால் அதனைப் பற்றிக் கவலைப்படாத சுரேஷ்போபி, கேரளாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் மேலும் சர்ச்சையில் சிக்கினார் சுரேஷ்போபி.

இந்நிலையில், கேரள மாநிலம் புத்தூர் பகுதியில் சூறைக்காற்றில் விழுந்த மரங்களை பார்வையிடச் சென்ற சுரோஷ்கோபி, அங்குள்ள நிலைமையை அம்மக்களிடையே கேட்டறிந்தார். அப்போது சுரேஷ்கோபி அங்கிருந்த காவலரிடம் சல்யூட் அடிக்கும்படி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எம்.பி சுரேஷ்கோபிக்கு பாதுகாப்பு அளிக்க வந்த காவல்துறை எஸ்.ஐ தனது வாகனத்தில் அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்த சுரேஷ்கோபி, தான் ஒரு மாநிலங்களவை உறுப்பினர். மேயர் அல்ல. ஒரு சல்யூட் அடிக்கலாம். ஏன் முறைகளை மாற்றுகிறீர்கள் என்று கடுகடுத்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எஸ்.ஐ சுரேஷ்கோபிக்கு சல்யூட் அடித்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.பி சுரேஷ்கோபிக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மேலும் சுரேஷ்கோபி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டெல்லிவரை செல்வாக்கு இருக்கு.. மருத்துவ சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பா.ஜ.க தம்பதி!