India

ரூ.500க்காக தப்பியோடிய கணவன்; மனைவியை சிறைபிடித்து பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள் : பீகாரில் கொடூரம்!

பீகாரின் பாகல்பூரில்தான் இந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. கடந்த சனிக்கிழமையன்று இரவு 9 மணியளவில் 25 வயது கொண்ட பெண் ஒருவர் தனது கணவருடன் கோபிபாரி பகுதியில் நடந்து வந்துக் கொண்டிருந்த போது கஹனியா யாதவ், சாவன் யாதவ் ஆகிய இருவர் சாப்பிடுவதற்கும் மது வாங்குவதற்கும் 500 ரூபாய் கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள்.

ஆனால் பணம் கொடுக்க முடியாது என கணவன் மறுத்ததால் அவரை கஹனியாவும், சாவனும் அடித்து துன்புறுத்தியிருக்கிறார்கள். அப்போது சாவன், கஹனியாவிடம் போய் மன்னிப்பு கேட்டால் உன் கணவரை விடுவிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

அந்த பெண்ணும் மன்னிப்பு கேட்கச் சென்ற நேரத்தில் பெண்ணின் கணவர் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதனால் செய்வதறியாது திணறிய அப்பெண்ணை சாவனும், கஹனியாவும் துப்பாக்கியை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு இது தொடர்பாக வெளியே தெரியப்படுத்தக் கூடாது எனவும் மிரட்டியிருக்கிறார்கள்.

ஒருவழியாக அந்த கயவர்களிடமிருந்து தப்பிய அப்பெண், அருகே இருந்த குடியிருப்புக்குள் தஞ்சமடைந்திருக்கிறார். அங்கு அவருக்கு உணவு உடை அளித்திருக்கிறார்கள். பின்னர் காவல் நிலையத்தில் நடந்த கொடூரங்கள் குறித்து அப்பெண் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

அண்மையில் மும்பையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக பாலியன் வன்கொடுமைக்கு ஆளாகி 33 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அது குறித்து விசாரணை நீடித்து வரும் வேளையில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது நாட்டு மக்களிடையே அச்சத்தையும் பதற்றத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட பெண்: 33 மணிநேர போராட்டத்துக்கு பின் பலி; மும்பையில் கோர நிகழ்வு