India

“மோடியுடனான நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில்..” : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்தது ஏன்?

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். குஜராத் ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் விஜய் ரூபானி.

பா.ஜ.கவைச் சேர்ந்த 65 வயதான விஜய் ரூபானி 2016 முதல் குஜராத் முதல்வராக இருந்துவந்தார். அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார்.

மொத்தம் 182 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட குஜராத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ராஜினாமா கடிதம் அளித்த பிறகு விஜய் ரூபானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கிய பா.ஜ.,விற்கும், என்னை வழிநடத்திய நட்டாவுக்கும் நன்றி.

மாநிலத்தின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். புதிய கொள்கைக்கு புதிய தலைமை தேவைப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக பசவராஜ் பொம்மையும், உத்தரகாண்டில் திரத் சிங் ராவத் ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு பதிலாக திரிவேந்திர சிங் ராவத் புதிய முதல்வராகவும் பொறுப்பேற்ற நிலையில் குஜராத் முதல்வரும் ராஜினாமா செய்துள்ளது அரசியல் அரங்கில் கவனிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக குஜராத்தின் அகமதாபாத்தில் சர்தர்தம் பவனை திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் ரூபானி பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களிலேயே விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலையொட்டி, பா.ஜ.கவில் மூத்த தலைவர்களை கழற்றிவிட்டு, புதிய முகங்களை அறிமுகப்படுத்தும் வகையில் பா.ஜ.க தலைமை உத்தரவின்பேரில் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “நீட் தேர்வு வினாத்தாள் லீக்?” : மாணவர்கள் அதிர்ச்சி - சி.பி.ஐ விசாரணை தேவை என கொந்தளிப்பு!