India

“25 ஆண்டுகளில் 66 நாடுகளுக்குப் பயணம் செய்து அசத்திய மூதாட்டி” : யார் இந்த சுதா மகாலிங்கம்?

உலகம் முழுவதும் சுற்றுப்பயண காதலர்கள் நிறைந்துள்ளனர். இவர்கள் புது புது இடங்களைத் தேடிச் செல்வதே இவர்களது வாழ்க்கையின் முக்கிய பணியாக இருக்கும். இந்தியாவில் கூட இளைஞர்களுக்குச் சுற்றுப்பயணத்தின் மீதான ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது.

நாம் அவ்வப்போது கூட செய்திகளில் தனியாக சுற்றுப்பயணங்கள் சென்றவர்கள் குறித்து படித்திருப்போம். அந்த வரிசையில், 70 வயதாகும் மூதாட்டி ஒருவர் 25 ஆண்டுகளில் 66 நாடுகளுக்குச் சென்று பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சென்னையைச் சேர்ந்த சுதா மகாலிங்கம் என்பவர்தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகைத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு இந்த வேலையை விட்டுவிட்டு எரி சக்தி ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார். இந்த ஆய்வே இவருக்குச் சுற்றுப்பயணங்களுக்கான அடித்தளமிட்டு உள்ளது.

இவர் ஒரு வருடத்தில் ஐந்து அல்லது ஆறு நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இப்படி இவர் திட்டமிட்டதின் அடிப்படையிலேயே 25 ஆண்டுகளில் 66 நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். இதனால் தற்போது இவரது கையில் ஆறு இந்திய பாஸ்போர்ட்டுகள் உள்ளது.

சுதா மகாலிங்கம் 1996ம் ஆண்டு தனது 40 வயதில் கைலாஷ் மானசேரா மலைப்பகுதியில் 32 நாட்கள் பயணமே இவரது முதல் சுற்றுப்பயணமாகும். இப்படி உலகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ளும்போது உள்ளூர் சுற்றுலா ஆலோசகர்களின் துணையுடன் தனி நபராக சென்று வந்துள்ளார்.

மேலும் உலகில் பயணம் செய்தது குறித்து ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். நாம் பயணம் செய்யும் போது எந்த ஒரு திட்டமிடலும் செய்யாமல் இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என சுதா மகாலிங்கம் தெரிவித்துள்ளார். பயணங்களை எப்படித் திட்டமிட வேண்டும் என்பது குறித்து ராகுல் சாங்கிருத்தியாயன் "ஊர்சுற்றி புராணம்" என்ற நூல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “Light மாற்றுவதற்கு 28 லட்சம் ரூபாய் சம்பளம்.. வருடத்திற்கு 2 நாள்தான் வேலை” : அது என்ன வேலை தெரியுமா?