India

“பா.ஜ.க தலைவர்களுக்கு தைரியம் இருந்தா வாங்க.. நான் தோத்துட்டா அரசியலை விட்டே போறேன்” : TMC எம்.பி சவால்!

ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோற்ற பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வழிகளில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.

பா.ஜ.க அரசு சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு ஆகியவற்றின் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு பல்வேறு வழக்கு விசாரணைகளுக்காக சம்மன் அனுப்பி வருகிறது. அதற்கு பதிலடியாக மேற்கு வங்க அரசு, மாநில பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேற்கு வங்காளத்தில் நடந்த நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் பானர்ஜி எம்.பி.க்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் டெல்லி செல்வதற்காக கொல்கத்தா விமான நிலையம் வந்த அபிஷேக் பானர்ஜி, நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் “நான் எந்த வகையான விசாரணையையும் சந்திக்கத் தயார். இது கொல்கத்தா வழக்காக இருந்தாலும், டெல்லி வரவழைத்துள்ளனர். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் தோற்றுவிட்டதால், பா.ஜ.க பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

விசாரணை அமைப்புகளைத் தனது அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவதைத் தவிர பா.ஜனதாவுக்கு வேறு வேலை இல்லை. நான் கடந்த நவம்பர் மாதம், பொதுக்கூட்டங்களில் சொன்னதையே மறுபடியும் சொல்கிறேன்.

நான் 10 காசு சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எந்த மத்திய அமைப்பாவது நிரூபித்தால் சி.பி.ஐ.யோ, அமாலாக்கத்துறையோ விசாரணை நடத்தவே தேவையில்லை. நானே மேடை மீது ஏறி, பகிரங்கமாக தூக்கில் தொங்குவேன்.

கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை அமைப்புகள் என்ன சாதித்தன என்பது பற்றியோ, மோடி ஆட்சியில் நாட்டின் கதி பற்றியோ பா.ஜ.க தலைவர்கள் என்னுடன் விவாதிக்க வரத்தயாரா? இடம், நாள், நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நான் வருகிறேன். விவாதத்தில் பா.ஜ.கவை தோற்கடிக்காவிட்டால், அதன் பிறகு நான் அரசியலில் கால் பதிக்கமாட்டேன்” என சவால் விடுத்துள்ளார்.

Also Read: 5 பொது, 4 தனி... 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!