India

“பொதுமக்களை தரைகுறைவாக ‘டா, டி’ போட்டு பேசக்கூடாது” : காவல்துறையை எச்சரித்த கேரள உயர்நீதிமன்றம் !

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் அனில். இவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில், “நான் திருச்சூரில் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்நிலையில் கடந்த மாதம் கடைக்கு வந்த செர்பு காவல்நிலைய அதிகாரிகள், கொரோனா நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டி கடையைப் பூட்டச் சொல்லி வற்புறுத்தினர்.

அதுமட்டுமல்லாது போலிஸார், என்னையும் கடையிலிருந்த எனது மகளையும் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டினர். இது எங்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்திருந்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனுமீதான விசாரணை நீதிபதி தேவன்ராமசந்திரன் முன்னிலைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சில நாட்களாகவே போலிஸார் மீது அதிகமான புகார்கள் வருகிறது. போலிஸார் பொதுமக்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். அனைவரையும் குற்றவாளிகள் என நினைத்து நடந்து கொள்ளக் கூடாது.

பொதுமக்களிடம் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் யாரையும் 'டா', 'டி' போட்டு அழைக்கக்கூடாது. இது தொடர்பாக காவல்துறை டி.ஜி.பி சரியான வழிகாட்டுதல்களுடன் உடனே அனைத்து போலிஸாருக்கும் சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்” என தெரிவித்து தீர்ப்பு வழங்கினார். நீதிபதியின் இத்தகைய தீர்ப்பை பலரும் வரவேற்றுள்ளனர்.

Also Read: வழக்குகளை பதிவு செய்துவிட்டு கண்டுகொள்ளாமல் இருப்பதா? - CBI-ஐ கேள்விகளால் துளைத்தெடுத்த உச்ச நீதிமன்றம்!