India

ஐபோனால் கேக் வெட்டிய பா.ஜ.க MLA-வின் மகன் : “பழச மறந்துட்டீங்களா சார்?” எனக் கேட்கும் தொகுதி மக்கள்!

பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் மகன், பிறந்தநாள் கேக்கை ஐபோனால் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கனககிரி தொகுதி பா.ஜ.க எம்.எல்.எல்.ஏ-வாக இருப்பவர் பசவராஜ். இவரது இரண்டாவது மகன் சுரேஷ் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளன்று சொகுசு காரில் தனது நண்பர்களோடு கனககிரி, காரடகி போன்ற பகுதியில் சுற்றிய சுரேஷ், ஹோஸ்பேட் என்ற பகுதிக்கு அருகேயுள்ள ஒரு இடத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது ஹேப்பி பர்த்டே சுரேஷ் என்ற ஆங்கில எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரு கேக்காக வடிவமைக்கப்பட்டு நீண்ட டேபிளில் வைக்கப்பட்டுள்ளன.

அத்தனை கேக்குகளையும், தனது லேட்டஸ்ட் மாடல் ஐபோனை பயன்படுத்தி வெட்டினார் சுரேஷ். கையை எடுக்காமல் அத்தனை கேக் மீதும் வரிசையாக கோடு போட்டதை போல வெட்டிச் சென்றார் சுரேஷ்.

பிறந்தநாள் கேக்கை ஐபோனால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது பணத் திமிரை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

ஆனால் இதுகுறித்துப் பேசியுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ பசவராஜ், “என் மகன், அவன் சம்பாதித்த பணத்தில்தான் அவனுடைய பிறந்தநாளைக் கொண்டாடினான். அதில் என்ன தவறு இருக்கிறது' என மகனின் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி மக்களிடம் பணம் திரட்டி தேர்தலில் போட்டியிட்ட பசவராஜ், எம்.எல்.ஏ ஆனபிறகு பணம் மற்றும் அதிகாரத்திமிரில் நடந்துகொள்வதாக அவரது தொகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Also Read: கொரோனா பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து காப்பாற்றிய செவிலியர் - ஒரு நெகிழ்ச்சிக் கதை!