India

“50 ரூபாய்க்கு மேல செலவு பண்ணுறியா?” : GST அதிகாரியான மனைவியை அடித்து உதைத்த கணவர் - அதிர்ச்சி சம்பவம்!

குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் அதிகாரியாகp பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.

இதையடுத்து, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இவருக்கு ஜி.எஸ்.டி துறையில் உதவியாளராக வேலை கிடைத்தது. பின்னர் இவரின் கணவர், பேருந்தில் மட்டுமே வேலைக்குச் சென்றுவர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் இவரும் பேருந்தில் சென்று வந்துள்ளார்.

மேலும் அவரின் செலவுக்கு தினமும் 50 ரூபாய் மட்டுமே கொடுத்து வந்துள்ளார். கூடுதல் பணம் கேட்டால் கணவரும் அவரது பெற்றோரும் மறுத்து வந்துள்ளனர். இந்நிலையில் பெண் அதிகாரி ஒருநாள் 50 ரூபாய்க்கு மேல் செலவு செய்துவிட்டார்.

இதனை அறிந்து, ஆவேசமடைந்த அவரது கணவர் அவரை கடுமையாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் வேறு ஒருவருடன் தொடர்பு உள்ளது என்றும் தவறாகப் பேசி அவரை கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் மன வேதனையடைந்த அப்பெண் தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர், கணவர் அவரது வீட்டிற்குச் சென்று சமாதானம் செய்து மீண்டும் அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பிறகும் கணவர் அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் கடும் வேதனையடைந்த பெண் அதிகாரி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இவரது புகார் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து, அவரது கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜி.எஸ்.டி அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் மனைவியை, கணவரே அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இன்னொரு உ.பியாக மாறிவரும் ம.பி : இஸ்லாமிய வியாபாரிகள் மீது கொலைவெறித் தாக்குதல்- அதிகரிக்கும் குற்றங்கள்!