India

இரவோடு இரவாக நீக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்... டெல்லி பல்கலை. முடிவால் அதிர்ச்சி!

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைக்கான பாடப்பிரிவில் பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

இவர்களின் படைப்புகள் ஆங்கிலத் துறை பேராசிரியர்களுக்கு தெரியாமலேயே இரவோடு இரவாக படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழக தேர்வுக் குழு ஆலோசனைக்குப் பின்னரே படைப்புகள் நீக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றிற்குப் பதிலாக ராமாபாயின் படைப்புகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி பல்கலைக்கழக ஆங்கிலத்துறையின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.

பொதுச் சமூகத்தில் அழுத்தமான சலனங்களை தங்களது படைப்புகள் மூலம் ஏற்படுத்திய இவர்களின் படைப்புகள் மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also Read: இந்தி திணிப்பு முயற்சியை கைவிடாத பா.ஜ.க... மீண்டும் சர்ச்சை - பா.ஜ.க அமைச்சருக்கு மதுரை எம்.பி கடிதம்!