India

“மனைவி விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வதும் பாலியல் வன்கொடுமையே” : கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமான மனைவியின் தந்தையிடம் பணம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தினமும் அவரை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.

மேலும், மனைவியை வலுக்கட்டாயமாக உடலுறவிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி விவகாரத்துக்கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண் அனுபவித்த கொடுமைகளின் அடிப்படையில் விவகாரத்து மனு தாக்கல் செய்ய அவருக்கு அனுமதி கொடுத்தது. அதேநேரம், பெண்ணின் கணவரும் தாக்கல் செய்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் முஹம்மது முஷ்டாக் மற்றும் கவுசர் எடப்பாக்கத் ஆகியோர் அமர்வுக்கு வந்தது. நீதிபதிகள் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தனர். பின்னர் பேசிய நீதிபதிகள், “மனைவியின் விருப்பத்தையும் உணர்வுகளை அவரது கணவர் மதிக்கவில்லை. தனது மனைவியின் உடல் தனக்கு சொந்தம் என்ற எண்ணத்தில் அவரது கணவர் இருந்துள்ளார். நவீன சமூக நீதித்துறையில் அப்படி எந்த எண்ணத்திற்கும் இடமில்லை.

இருவரும் சமம் என்ற நிலையே உள்ளது. எனவே, மனைவி மீது எவ்வித எதேச்சதிகாரத்தையும் கணவர் கோர முடியாது. மனைவியின் உடல் தனக்குச் சொந்தமானது என கருதி அவரது விருப்பமில்லாமல் உடலுறவு கொள்வது கணவர் மனைவி மீது செலுத்தும் பாலியல் வன்கொடுமையே (Marital rape) ஆகும்.

பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதோடு, பிறருடன் அவரை தொடர்புப்படுத்திப் பேசியது கொடுமையாகும். ஆகவே, மனைவியின் சுய உரிமையை மதிக்காமல் அவர் மீது உரிமை செலுத்த முயன்ற கணவரின் செயல் வல்லுறவாகக் கருதப்படும். இதனைக் காரணமாகக் காட்டி விவாகரத்து கோரலாம்” என தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பெண்கள் அமைப்பினர் பலரும் வரவேற்றுள்ளனர்.

Also Read: “பணியிடத்தில் துன்புறுத்தல்.. உயரதிகாரி முகத்தில் மண்ணை வீசிய பெண் அதிகாரி” : ஆந்திராவில் பரபரப்பு!