India

“சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு அரசும், காவல்துறையும் பொறுப்பேற்காது”: பா.ஜ.க முதல்வரின் சர்ச்சை பேச்சு!

கோவா மாநிலம், பெனாலிம் என்ற கடற்கரையில் கடந்த ஞாயிறன்று 2 சிறுவர்கள் மற்றும் 2 சிறுமிகள் என நான்கு பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த நான்குபேர் கொண்ட கும்பல் ஒன்று, நாங்கள் போலிஸார் என கூறி இரண்டு சிறுவர்களைத் தாக்கியுள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் இரண்டு சிறுமிகளையும் அடித்து இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் அவ்வழியாக வந்தவர்கள் நான்கு சிறுவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் அனுமதித்துள்ளனர்.

பின்னர், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோவா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் கோவா சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் மாநில அரசு கடுமையாக சாடி பேசினர். குற்றவாளிகளுக்கு ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றாட்சாடினார்கள்.

இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் பிரமோத் சாவந்த், “பெனாலிம் கடற்கரையில் நடந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பார்டிக்காக கடற்கரைக்கு சென்ற பத்து பேரில் ஆறு பேர் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர்.

ஆனால் இந்த நான்கு சிறுவர்கள் மட்டுமே இரவில் கடற்கரையில் இருந்துள்ளனர். சிறுவர்கள் இரவு நேரத்தில் கடற்கரையில் இருக்கக் கூடாது. இவர்கள் ஏன் கடற்கரையிலிருந்தார்கள் என்பதைப் பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெற்றோர்களின் குரல்களுக்குக் குழந்தைகள் செவி சாய்க்கவில்லை. எனவே இந்த சம்பவத்துக்கு அரசாங்கமும், காவல்துறையும் பொறுப்பேற்க முடியாது” என தெரிவித்ததுள்ளார். இவரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: “பத்திரிகையாளரென தெரிந்தே கொலை” : தானிஷ் சித்திக் மரணத்தில் திடீர் திருப்பம் - வெளியான அதிர்ச்சி தகவல்!