India

27% OBC இட ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்... வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை பெற்றுத்தந்த மு.க.ஸ்டாலின்!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கவேண்டும் என அறிவுறுத்தியது.

அதேநேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அதுதொடர்பான விசாரணையின்போது, ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என ஒன்றிய அரசு பதில் மனு அளித்தது.

இதனால் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒன்றிய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்கினர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அவர் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு திட்டத்தில் ஓ.பி.சி-க்கு 27% இட ஒதுக்கீடு வழங்க முடிவு எடுத்துள்ளதாகவும், இந்த கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாகவே ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பேசியுள்ள தி.மு.க எம்.பி பி.வில்சன், "அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் கிடைத்த வெற்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “69% இட ஒதுக்கீடு.. BC/MBC மக்களின் கல்வி, பொருளாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கை” : முதல்வர் மு.க.ஸ்டாலின்