India
ரயில் என்ஜின்களில் கழிவறை வசதியை ஏற்படத்த ஏன் இத்தனை தாமதம்? - ஒன்றிய அரசுக்கு வைகோ கேள்வி!
ரயில் என்ஜின்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தச் சொல்லி ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில், “இது வரையிலும், ரயில் என்ஜின்களில் கழிப்பறைகள் இல்லை; அடுத்த பெட்டிக்குச் செல்வதற்கான வழியும் இல்லை; இதனால், ரயில் என்ஜின் பைலட்டுகளும், உதவியாளர்களும், இயற்கை அழைப்புகளுக்காகத் தவிக்கின்ற நிலை உள்ளது. தொடரி நிலையங்களில் ரயில்கள் நிற்கின்ற நேரமும் குறைவாக இருப்பதால், அங்கே உள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கும் உரிய நேரம் கிடைப்பது இல்லை.
நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்தப் பிரச்சினையை, எங்களுடைய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொழிலாளர் முன்னணியினர், இன்று எனது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
2013-14 ஆம் ஆண்டுக்கான இந்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, என்ஜின்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும் என, ரயில்வே அமைச்சர் அறிவித்தார். 2014 ஆம் ஆண்டு, மனித உரிமைகள் ஆணையம், இந்தப் பிரச்சினையை ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு நினைவூட்டி, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டது. ஆனால், இதுவரை எந்தப் பயனும் இல்லை.
முன்பு தொடரிகளில், பயணச் சீட்டு பரிசோதகர்களுக்கு, படுக்கை வசதி கிடையாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்பியதுடன், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கையும் விடுத்தேன். அதன் விளைவாக, அவர்களுக்கு படுக்கை வசதி ஏற்படுத்தித் தரப்பட்டது.
அண்மைக்காலமாக, ரயில் என்ஜின் பைலட்டுகளாக பெண்களும் பயிற்சி பெற்றுப் பணியில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தாங்கள் இந்தப் பிரச்சினையில் உடனடி கவனம் செலுத்தி, ரயில் என்ஜின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
Also Read
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!